Navigation


RSS : Articles / Comments


உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .

1:57 PM, Posted by sathiri, No Comment


உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .
புதிய தலைமுறை  வார இதழுக்காக ..
சாத்திரி பிரான்ஸ் .



அக்டோபர் மாதம் 3ம் திகதி அமெரிக்காவின் முன்னணி தொலைக்கட்சி தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து  மில்லியன்  யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த  நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.இந்திய மதிப்பிற்கு  74 கோடி ரூபாய்கள் .உலகக் கொள்ளை வரலாற்றிலேயே ஒரு தனி நபரிடம் இவ்வளவு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் இதுதான் . இது வரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.இவ்வளவு கச்சிதமான கொள்ளையையை நிச்சயம் ஊதாப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிறனர் பிரெஞ்சு காவல் துறையினர் .

 யாரிந்த  ஊதாப்புலிகள்.   Pink Panther என்றதுமே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது அமெரிக்காவை சேர்ந்த Friz Freleng  என்பவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப் பட்ட கதா பாத்திரமும் அவர்களுக்கு   பிடித்தமான காட்டூன் படங்களும்   தான். ஆனால் நான் இங்கு  சொல்ல வருவது உலகின் மிகப் பயங்கர கொள்ளையர்களான ஊதாப் புலிகளைப் பற்றியது.

சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் அதன் ஆளுகையின் கீழிருந்த மேலும் பல நாடுகளும் பிரிந்து தனித் தனி சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.அப்படி உருவான யுகோஸ்லாவியா நாட்டின் ஆளுகைக்குள் இருந்த நாடுகள் மீண்டும் உடைந்து பல நாடுகள் உருவானதில் செர்பியா தனி நாடாக இயங்குகின்றது.சோவியத் யூனியனின் உடைவின் போது செர்பிய இராணுவத்தினரே ஊதாப் புலிகள் என்கிற கொள்ளை  அமைப்பை 1996 ம் ஆண்டு உருவாக்கினார்கள். இவர்களின் தொகை சுமார் அறுநூறில் இருந்து ஆயிரம் பேர் வரை இருப்பார்கள் என்கிறனர் சர்வதேசப் புலனாய்வுப் போலீசார்.

உலகம் முவதும் சுமார் 110 க்கும் அதிகமான கொள்ளைகளை நாடாத்தி முடித்துள்ளனர்.இதுவரை காலமும் உலகை உலுக்கிய இத்தாலியில் தோன்றிய மாபியா கொள்ளைக் கும்பலை பின்னுக்குத்தள்ளி இன்று சர்வதேச பொலிசாரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் முன்னணி கொள்ளையர்களாக மாறிவிட்டிருகிரர்கள் .
இவர்களின் ஸ்பெசாலிட்டி  விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை குறிவைத்து கொள்ளையடிப்பதுதான்.

அது நகைக்கடையாகட்டும்,வங்கியாகட்டும்,அல்லது தனி நபர்களாக இருக்கட்டும் இவர்களது குறி விலையுயர்ந்த வைரங்கள் பதித்த நகைகளே.அதே நேரம் கொள்ளைகளின் போது  யாருக்கும் பயங்கர காயங்கள் ஏற்படுத்துவதோ, சுட்டுக்கொலை செய்வதோ கிடையாது .அது அவர்களது தொழில் தர்மம் .பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் 250 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
பாதுகாப்பும் தொழில் நுட்ப வசதிகளும் வளர்ந்து விட்ட மேற்கு நாடுகளில் பொலிசாருக்கு சவால் விட்டபடி எப்படி இவர்களால் அதுவும் பட்டப் பகலிலேயே கொள்ளைகளை நடத்தமுடிகிறது என்றால் அவர்களின் துல்லியமான இலக்குத் தெரிவும் .கண்ணிமைக்கும் வேகமுமே காரணம் .ஒரு வேளை இலக்குப் பிழைத்து விட்டல் மேலதிகமாக எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

இவர்களின் கொள்ளையின் வேகத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம்.2009 ம் ஆண்டு 13ந் திகதி ஜூலை மாதம் பிரான்சின்  கேன்ஸ் நகரில் பிரபலமான  Cartier நகைக் கடைதான் இவர்கள் இலக்கு .கடைக்கு நேரே எதிரில் வீதியை கடந்தால் வெறும் பத்து மீற்றர் தூரத்தில் தான் காவல் நிலையம்.மதியமளவில் வேகமாக வந்த கார் ஓன்று நகைக்கடை கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து கொள்ள அதிலிருந்து இறங்கிய இருவர் வேகமாக நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு தப்பிவிடுகிறார்கள்.கடைக்குள் கார் பாய்ந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வந்து அங்கு என்ன நடக்கின்றது என்று அங்கிருந்தவர்களும் பொலிசாரும் உசாரடைவதற்க்குள் கொள்ளையடித்தவர்கள் வேலையை முடித்துக்கொண்டு பறந்து விட்டார்கள்.இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 41 செக்கன்கள் தான்.கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி 15 மில்லியன் யூரோக்கள் .

ஆனாலும் இதுவரை உலகம் முழுதும் ஊதாப்புலிகள் ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.இந்த அமைப்பின் முக்கியமான மூளை எனப்படும் இருவரை அவர்கள் மாறு வேடத்தில் இருந்தபோது 2007 ம் ஆண்டு மொனாகோ போலீசார் சர்வதேச பொலிசாரின் உதவியுடன்  ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்தனர்.மாறு வேடமென்றால் நம்பியார் போல கன்னத்திலை மச்சம் வைத்த மாறுவேடமல்ல.நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள் பிரேசிலில் சென்று  பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் பழைய அடையாளங்கள் எதுவுமே தெரியாத மாதிரி முகத்தையும் உடலையும் மாற்றிக் கொண்டு மொனாக்கோ வங்கியில் பல மில்லியன் பணத்தை வைப்பிலிட வந்திருந்தபோதே கைது செய்யப் பட்டனர்.மொனாக்கோ வங்கியும் சுவிஸ் வங்கியைபோலவே கறுப்புப்பணத்தை வைப்பிலிடலாம்.எந்தக் கேள்வியும் கிடையாது.எனவே இந்திய அரசியல் வாதிகள் கவனத்திலெடுக்கவும்.

இவர்களின் கைதின் பின்னர் பிரான்சில்  ஊதாப் புலிகளின் நடவடிக்கைகள் குறைந்திருக்கிறது என்று போலீசார் நிமதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த வேளை  கடந்த வருடம் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவிற்கு அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுவிஸ்லாந்து நாட்டு நகைக்கடை ஓன்று காட்சிப் படுத்த கொண்டு வந்த நகைகளில் 103 மில்லியன் யூரோ பெறுமதி வாய்ந்த வைரம் பதித்த நகையை பகல் 11.30 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொள்ளையடிக்கப்பட்டது. C.C. TV கமெராவில் ஒருவர் கண்ணாடியிலான பாதுகாப்பு பெட்டியை திறந்து வைரநகையை எடுப்பது பதிவாகியுள்ளது.ஆனால் நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை.
கொள்ளையடித்தவர் யார் எங்கே போனார் என்கிற எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் தாடையை சொறிந்துகொண்டிருக்கும் போதே பாரிசில் வைத்து kim kardashian னிடம் அடுத்த கொள்ளை நடந்துள்ளது.

தற்சமயம் பிரான்சில் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் பொலிசாரும், இராணுவமும் பாதுகாப்பு கடமையில் இருக்கும்போது.kim kardashian தங்கியிருந்த விடுதிக்கு காலை  சைக்கிள்களில்  வந்த ஐவரில் ஒருவர் வாசலில் காவல் நிற்க .இருவர் தங்களை சிவில் போலீசார் என அறிமுகப்படுத்தி ரிசெப்சனில் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றைய இருவர் முதலாம் மாடியிலிருந்த kim kardashian தங்கியிருந்த அறைக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.அதேநேரம் kim குளியலறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கொள்ளையடித்தவர்கள் சாவகாசமாக சைக்கிளிலேயே தப்பிச்சென்றுள்ளார்கள்.குளியலறையிலிருந்து வெளியே வந்த kim நகைகள் அடங்கிய தனது பையை காணாது ஹோட்டேல் பணியாளர்களை அழைத்த பின்னர்தான் விபரம் தெரியவந்தது.கொள்ளையர்கள் அனைவரும்  40 திலிருந்து  50 வயதுக்குள்ளனவர்கள் என்று விடுதி ரிசெப்சனிஸ்ட்  கூறியுள்ளார். அவர்கள் தப்பிச்செல்லும்போது  வைரம் பதித்த சிலுவையோடு கூடிய செயின் ஒன்றை வழியில் தவறவிட்டு சென்றுள்ளார்கள்.அதனை போலீசார்  தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அதில் கொள்ளையர்களின் கை ரேகை அடையாளம் பதிந்திருக்குமா ? இல்லையா ? என்பதற்குமபால் ..கொள்ளை நடந்தபோது kim kardashian னின் மெய் பாதுகாவலர் உட்பட விடுதி ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.சி சி டிவி கமராவில் அவர்கள் பதியப்படாமல் போனது எப்படி .

kim குளியலறையில் இருந்தபோது துல்லியமாக கொள்ளையர்கள் அறைக்குள் புகுந்தது எப்படி.அந்த தகவலை யார் கொடுத்தது.அதி உயர் பாதுகாப்பு கொண்ட விடுதி அறையின் கதவை எப்படி அவர்கள் திறந்தார்கள்?என கொள்ளையடிக்கப் பட்ட பத்து மில்லியன் யுரோவுக்கும் அதிகமான கேள்விகள் மிஞ்சிக் கிடக்கின்றது..விடை கிடைக்குமா தெரியாது ..கொள்ளையடித்தவர்கள் ஊதாப் புலிகள் என்பதைத் தவிர.. இதுவரை வேறெந்த தகவல்களும் இல்லை ..கொள்ளையர்கள் பிடிபடும்வரை kim kardashian னைப் பார்த்து.. "ஊதாக் கலரு ரிப்பன்.. யார் கொள்ளைக்கு  அப்பன்" ..என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் ..




No Comment