Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து .லண்டன் .நூல் விமர்சனம் சாம் பிரதீபன்

2:48 PM, Posted by sathiri, No Comment


ஆயுத எழுத்து கனடா .ஒலி ஒளிப்பதிவு

2:38 PM, Posted by sathiri, No Comment

ஆயுத எழுத்து கனடா .ஒலி ஒளிப்பதிவு


அருளினியனின் பதிவு

12:42 PM, Posted by sathiri, No Comment


 Photo du profil de Aruliniyan Mahalingam
அருளினியனின் பதிவு

 Aruliniyan Mahalingam 

சாத்திரி எழுதிய 'ஆயுத எழுத்து' நாவலின் இறுதி எடிட்டிங்கை நான் செய்தேன். எடிட்டிங் செய்த அந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மன உளைச்சலுக்கு உள்ளானேன். சாத்திரி எழுத்திலே வடித்தவை காட்சி விம்பங்களாகி என்னை மிகவும் தொந்தரவு செய்தன. ஈழப் போராட்டம் சம்பந்தமாக நான் புரிந்து வைத்திருந்த பலவற்றை 'ஆயுத எழுத்து' கேள்வி கேட்டது. ஆயுத எழுத்தைப் பற்றி பொதுவெளியில் இது வரை ஒரு வரி கூட எழுதவில்லை. எழுதவும் தோணவில்லை. ஆனால், 'ஆயுத எழுத்து' சம்பந்தமாக எனது பதிவு அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன். நான் பிறந்த காலப்பகுதியில் ஈழப் போர் உச்சத்தில் இருந்தது.

 நான் பிறந்திருந்த முதல் வாரத்தில், எமது குடும்பத்தையே இந்தியன் ஆமிக்காரன் கொல்ல வந்ததாகவும், பச்சைக் குழந்தையாக இருந்த என்னைக் காட்டி எனது அம்மாச்சி அவர்களிடம் உயிர்பிச்சை கேட்டதாகவும் சொல்வார்கள். எனது 20 வது வயது வரை ஈழப்போரானது எனது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. எனக்குத் தெரிந்து விடுதலைப் புலிகள் என்ற ஒரே ஒரு அமைப்பு மட்டும்தான் தனி நாட்டிற்காகப் போராடினார்கள். ஒரே தலைவர் அவர் பிரபாகரன். அவர் எங்களின் மீட்புனர். ஒரே விடுதலை இயக்கம் அவர்கள்தான் விடுதலைப் புலிகள். 'புக்காரா' குண்டுவீச்சுக் கிடையிலும், கடுமையான 'ஷெல்'அடிக்கிடையிலும் பிறந்து வளர்ந்ததால், எனது ஈழ வாழ்க்கையை, ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி, கொஞ்சம் பயத்துடனும், கொஞ்சம் நம்பிக்கையீனத்துடனும்தான் என்னால் நினைவு கூற முடியும்.

 ஈழப் போராட்டம் சம்பந்தமாக என்னளவில் பல நம்பிக்கைகள் இருந்தன. ஆயுத எழுத்து நாவல் என்னளவிலும் முக்கியமானது. ஏனென்றால் ஈழப் போராட்டம் சம்பந்தமான எனது பல நம்பிக்கைகளை இந்த நாவல் உடைத்தெறிந்தது. ஆயுத எழுத்தைப் பற்றி சொல்வதற்கு முதல் சாத்திரியைப் பற்றி சொல்வது அவசியம். சாத்திரியார் எனக்கு அறிமுகமாகி சுமார் இரண்டு வருடங்கள் இருக்கலாம். நான் அவருக்கு முதன் முறையாக தொலைபேசிய போது தி.நகரில் இருந்தார் 'தம்பி, மனிசியோட புடவை எடுக்க வந்தனான்' 'எப்ப கோடம்பாக்கம் வருவியள் அண்ண' 'போற போக்கைப் பாத்தால் ரெண்டு நாள் ஆகும் போல' என்றார். அன்றே தி.நகர் சென்று அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை சிலருக்குப் பிடித்து விடும். இல்லையா...? சாத்திரிக்கு என்னையும், என்னை சாத்திரிக்கும் பரஸ்பரம் பிடித்துவிட்டது. இன்றும் கூட ஒரு அண்ணன் ஸ்தானத்தில் வைத்து அவரை நான் மதிக்கிறேன். சந்தித்த முதல் நாளே, ஒரு விஸ்கியுடன் தனது வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தார். போராட்டத்தில் சேர்ந்தது, மாற்று இயக்கங்களைப் போட வேண்டி வந்தது, நண்பனுக்கெதிராக துப்பாக்கியை தூக்கிய நொடி, ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், பெண் சகவாசம், என எல்லாவற்றையும் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். குரலின் எந்த நொடியிலும் ஒரு துளி குற்ற உணர்ச்சியையும் நான் காணவில்லை. கொலைகளை அவர் விபரித்தவிதம் ஏதோ பெரிய சகாசக்காரன் தனது சகாசத்தை விபரிப்பதுபோல இருந்தது.

 இவர் மனிதனா...? என எண்ணிக் கொண்டிருந்தேன். தனது மகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். கண் கலங்கினார், போதை பெரிதும் ஏறாமலேயே அழுதார். 'எளியவனா இருந்தேன் தம்பி. ரத்தமும் சதையுமா மகளைக் கையில தந்த நொடிதான் மனிதனாக மாறினேன்' என்றார். அது சம்பந்தமாக பல கதைகள் சொன்னார். அவற்றை இங்கே எழுதக் கூடாது. நம்பிக்கை சம்பந்தப்பட்டவை. சாதாரண மனிதத் தன்மையுட சாத்திரி போன்றவர்களை, போராட்டம் எந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது என உணர்ந்த நொடி அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் சாத்திரியை எடுத்த பேட்டிகள் 'சாத்திரி பேசுகிறேன்' என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் பதிவாகி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

வழமைபோல சில நண்பர்கள் என்னைத் துரோகி என்றார்கள். சிலர் தொலை பேசியிலும் மிரட்டினார்கள். அந்த பேட்டியில் சாத்திரி எவ்வளவு தூரம் மனம் திறந்து பேசியிருந்தாரோ, அதே அளவு இந்த நாவலிலும் பேசி இருக்கிறார். 'ஆயுத எழுத்'தை நாவல் என சொல்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. சம்பவங்களின் தொகுப்பை நாவல் எனலாம் என்றால் இதுவும் ஒரு நாவல். எப்படி இருந்தாலும் ஆயுத எழுத்து மிகவும் முக்கியமான ஒரு ஆவணம். பேரினவாதத்திற்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சியுடன் ஆயுதம் எடுத்த ஒரு சாதாரண 'மாணவ'னின் வாழ்க்கை எப்படி அலைக்கழிக்கப்பட்டது என்பதற்கு இந்த நாவல் சாட்சியமாகிறது. விடுதலை என்ற பெயரில் கொலைகளை, மனித உரிமை மீறல்களை, போர்க் குற்றங்களை எல்லாம் எப்படி நாம் இலகுவாக நியாயப் படுத்தினோம் என்பதை இந்த நாவல் பேசுகிறது. வாசிப்பவனைக் பல கேள்விகள் கேட்க வைக்கிறது.

 நாவலில் எனக்குத் தென்பட்ட ஒரு சில குறைகள், சாத்திரியார் எனக்கு எப்படி தனது வாழக்கையை சொன்னாரோ அதேபோல ஒரு சகாசக் காரனின் மன நிலையில் தான் பல அத்தியாயங்களைக் கடந்து போகிறார். இப்படியான மொழி நடை சிலவேளைகளில் வாசிப்பவனின் மனதில் நாவலின் உண்மைத் தன்மை சம்பந்தமாக சந்தேகத்தை ஏற்படுத்தும். காமம் சம்பந்தமாக சாத்திரி விபரிக்கும் பகுதிகளில் அவரின் மொழியில் அவதானம் தேவை என்பது எனது கருத்து. இன்னொரு மனக்குறையும் வந்து போனது, சாத்திரி தனது வாழ்க்கை அனுபவங்களாக 'ஆயுத எழுத்'தில் விபரித்தவற்றை வைத்து குறைந்தது பத்து நாவல்களாவது எழுதி இருக்கலாம். ஷோபா சக்தியாக இருந்திருந்தால் குறைந்தது ஆயிரம் சிறு கதையாவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். எது எப்படியோ, ஈழப்போராட்டத்தைக் கவனிக்கும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நாவல் 'ஆயுத எழுத்து' என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து

7:27 AM, Posted by sathiri, No Comment

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து:
இரு நூல்கள் ஒரு அறிமுகம்
kumaran1ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் இருவரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஒரு நூல் போராளி ஒருவரின் நினைவுக்குறிப்புகள். மற்ற நூல் “சிப்பாய் ஒருவரின்” நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நாவல்(?). இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.
sathiri2சாத்திரி என்ற கௌரிபால் சிறி எழுதிய ஆயுத எழுத்து நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் ரொரன்டோவில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார்கள். மதிய உணவு நேரம் யாராவாது கூட்டத்தை ஆரம்பிப்பார்களா என்ற எரிச்சல் மனதில் இருந்தாலும் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் 2 மணிக்குச் செல்வது எனத் தீர்மானித்தேன். இந்த நேரத்திற்கு செல்வதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் செய்து உடன்பாடு காணவேண்டி இருந்தது. ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அப்படி. வழமையாக எந்த நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக வேண்டும் என நினைப்பதுடன் நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கவும் வேண்டும் என விரும்புபவன். ஆனால் நிகழ்வுகளை நடாத்துகின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. இதனால் நமக்குள் பிர்ச்சனை உருவாகும். ஆகவே ஒரளவு மதிப்பிட்டு அரை மணித்தியாலம் தாமதமாக சென்றாலும் நிகழ்வு ஆரம்பிக்காது. இது எனக்கு மேலும் பிரச்சனையை உருவாக்கும். மேலும் யார் எந்த நிகழ்வு நடத்தினாலும் சமூக அரசியல் விடயங்கள் சார்ந்தது எனின் எனக்கு ஆர்வமானது எனின் நிச்சயமாக செல்வேன். யார் ஒழுங்கு செய்கின்றார்கள் எனப் பார்த்து முடிவெடுப்பதல்ல எனது தெரிவு. ஆனால் இங்கு பலர் அப்படித்தான் செய்கின்றார்கள். இதனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட நிகழ்வை ஒழுங்கு செய்பவர்களின் நண்பர்களில் சிலர் மட்டுமே வருகின்றனர். ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளவையா என்ற கேள்வியும் உள்ளது.
sathiri1ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்வு இவ்வாறான அசாதாரணமான நேரத்திற்கு அறிவித்தது மட்டுமல்ல இடமும் வழமைக்கு மாறாக புதியதொரு இடம். அதுவும் இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. விலாசம் இல்லை. இது கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. இப்படி பல காரணங்களால் நிகழ்வு இரண்டரை மூன்று மணியளில் ஆரம்பமானது. இந்த நிகழ்வை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்திருந்தது.
தர்சன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கி சிறப்பானதொரு விமர்சன உரையை நிகழ்த்தினார். இந்த நூல் ஒரு போராளியின் படைப்பு அல்ல எனவும் மாறாக ஒரு சிப்பாயின் நினைவுக்குறிப்புகள் என இவர் குறிப்பிட்டார். ஏனெனில் ஒரு போராளிக்கு சமூக உணர்வும் பொறுப்பும் இருக்கும். தனக்கு என்ற ஒரு சுய சிந்தனை மதிப்பீடு இருக்கும். இந்த அடிப்படைகளிலையே தனது தலைமையுடன் இணைந்து பங்களிப்பார். ஆனால் ஒரு சிப்பாய்க்கு இவை எதுவும் இருக்காது. மேலிடம் என்ன சொல்கின்றதோ அதை எந்தக் கேள்விகளும் இல்லாமல் பின்பற்றுவதும் நிறைவேற்றுவதுமாகும். அவ்வாறான ஒரு பாத்திரமே ஆயுத எழுத்தில் வருகின்ற அவன் என்கின்ற பாத்திரம். மேலும் ஹொலிவூட் ரக சாகாச கதாநாயகன் போன்ற ஒருவராகவே இப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூல் ஒருவகையில் முக்கியமானது. அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்க மேல் மற்றும் மத்திய வர்க்க மற்றும் சாதிகளின் கருத்துக்களே ஈழவிடுதலைப் போராட்டத்திலும் மேலோங்கி இருந்தன என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது என்றார். (இந்த உரையை விரைவில் தர்சன் அவர்கள் பொதுத் தளம் ஒன்றில் பகிர்வார் என நம்புகின்றேன்).
raviமுன்னால் வைகறை ஆசிரியர் ரவி அவர்கள் தனது அனுபவங்கள் மற்றும் தான் அறிந்த தனக்குத் தெரிந்த தகவல்களுடன் எவ்வாறு இந்த நூல் முரண்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டார். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் மீதான தாக்குதல் கற்பனை கதையாக கட்டப்பட்டிருக்கின்றது. புலிகளே திட்டமிட்டு ஈபி முகாம்களின் மீது இறுதித் தாக்குதலை தொடுத்தனர். இத் தாக்குதல் நடப்பதற்கு முதல் இரு பகுதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இதில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் தந்தையின் தலைமையில் யாழ் பல்கலைக்கழத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்பொழுது புலிப்போராளிகளின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் நன்றாக உடைகள் அணிவித்து அன்றைய ஈபியின் மக்கள் இராணுவத்தின் தளபதி தேவானந்தா அவர்கள் கொடுத்தார். ஆனால் புலிகள் இயக்கத்தினர் அந்த உடல்களுக்கு எந்த மரியாதையும் செய்யாது அவமதித்ததுடன் பொறுப்பற்ற முறையில் கையளித்தனர் என்றார். இந்த இடத்தில் தேவானந்தா தொடர்பாக இன்னுமொரு குறிப்பையும் குறிப்பிடலாம். பொன்னுத்துரை (குமரன்) அவர்களும் புளொட் ஈபி இயக்க மோதலின் மோதும் தேவானந்தா அவர்கள் மிகவும் பண்புடனும் தோழமையுடனும் செயற்பாட்டார் எனத் தனது நூலில் குறிப்பிடுகின்றார். (இன்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்றானாலும் அக் காலத்தில் இவ்வாறான பண்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை நாம் புறக்கணிக்க கூடாது).
சாம் சிவதாசன் அவர்கள் தனக்கு இயக்க அனுபவங்கள் மற்றும் சார்புகள் இல்லை என்பதால் தனது பார்வை பொதுமக்கள் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்றார். இவ்வாறு பலரும் தம் அனுபவங்களை எழுதும் பொழுதே நாம் உண்மையான ஒரு வரலாற்றை இவற்றிலிருந்து தொகுத்துப் பெறலாம். இந்தவகையில் இந்த நூல் வரவேற்கத்தக்கது என்றார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் இவ்வாறான நூல்களின் வரவுகள் அவசியமானதும் முக்கியமானதும் என்பதில் முரண்படவில்லை. ஓவியர் ஜீவன் அவர்களை உரையாற்ற அழைத்தபோது அந்த அழைப்பை மறுத்து கலந்துரையாடலில் தனது கருத்துக்களை கூறுவதாக குறிப்பிட்டார். உரையாடலின் போது டெலி மற்றும் டெலா இயக்கங்களின் தலைவர்களை புலிகளின் தலைமை திட்டமிட்டே அழித்ததாக குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல நினைத்ததை சாதிக்க கூடியவர்களாகவும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தமை புலிகளின் தலைமைக்கு சவாலானதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார். இதனாலையே வஞ்சகமான சூழ்ச்சியூடாக அவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் இது ஒரு நாவலுக்கான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் வாசிக்கும் பொழுது எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார். ஆனால் தனித் தனிப் பதிவுகளாக வாசித்தபோது இருந்த பாதிப்பு நாவலாக்கியபோது மறைந்து போனது என்றார். அதேவேளை த.அகிலனின் மரணத்தின் வாசனை என்றை சிறுகதைத் தொகுப்பு தனக்கு ஒரு நாவல் வாசித்த உணர்வைத் தந்ததாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலர் தமது கருத்துக்களைக் கூறினர். குறிப்பு எடுக்காது நினைவிலிருந்து எழுதுவதால் பல நினைவிலிருந்து மங்கிப்போய்விட்டன. புலிகள் இயக்கத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இயக்கங்களையும் நக்கலடிக்கவும் மலினப்படுத்தவும் இந்த நூல் தவறவில்லை எனக் கூறினேன். இவர் இவர்களது நேர்மறைப் பாத்திரங்களை மறந்தும் குறிப்பிடவில்லை. மேலும் இது ஒரு நாவலே இல்லை. மாறாக ஒருவரின் அனுபவக் குறிப்புகள். இதற்கு நாவல் வடிவம் கொடுப்பதற்கு தன்னைப் பாதுகாக்கின்ற ஒன்றே காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு தன்னைப் பாதுகாப்பாதில் இருக்கின்ற அக்கறை மற்றவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இல்லாமல் இருப்பது இதிலுள்ள பல குறைகளில் ஒரு குறை. முக்கியமாக திலகர் அவர்களின் இன்றைய நிலை தொடர்பாக ஒருவரும் ஒன்றும் அறியாத நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறமல்ல. இதுபோல சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் தென் ஆபிரிக்க வைத்தியர் தொடர்பாக இலகுவில் அடையாளப்படுத்தக் கூடியவகையில் தெரிவித்திருப்பதும் அறமல்ல. இதேபோல் யோ.கர்ணன் அவர்களும் தனது நூல் ஒன்றில் எழிளனை வெளிப்படையாக அடையாளப்படுதியிருந்தார். இவர்களது வாழ்வு கேள்விக்குறியாக இருக்கின்ற இக் காலங்களில் இவ்வாறு செய்வது அறமல்ல.
சாத்திரியின் (பாத்திரத்தின்) பார்வை பெண்கள் தொடர்பாக மிகவும் மலினமான பார்வையாக உள்ளது. ஏற்கனவே நண்பர்கள் குறிப்பிட்டதுபோல ஹொலிவூட் காதாநாயகன் ஒருவன் எவ்வாறு பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பானோ பயன்படுத்துவானோ அவ்வாறே இவரும் (அல்லது இவரது கதாநாயகனும்) பார்க்கின்றார். அதுவும் அரசியல் தலைமைகளின் தவறுகளால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் உணர்ச்சிகள் மேலிட அரசிடம் சென்று பணிபுரிந்த ஈபிஆர்எல்எவின் பெண் ஒருவர் தொடர்பாக மிகவும் மோசமாகக் குறிப்பிடுவதுடன் அவரது மரணத்தில் ஆனந்தமடைவது நமது போராட்டத்தின் எதிர்மறை விளைவுகளால் ஏற்பட்ட ஒரு இழி நிலை எனலாம். அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய பேய்க் கதைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இது.
இந்த நூலில் மகிழக் கூடிய ஒரு விடயம் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான குறிப்பு. இவ்வாறான ஒரு குறிப்பை இதுவரை யாரும் தமிழில் எழுதி நான் வாசித்ததில்லை. அதுவும் புலிகளிலிருந்து வந்த ஒருவர் எழுதியது ஆச்சரியமானதே. எல்லாம் காலத்தின் மாறுதலேயல்லாமல் மன மாறுதலோ அரசியல் அடிப்படையிலான புரிதலோ அல்ல என்பது வெளிப்படை. அதனால்தான் எல்லாவற்றையும் குறிப்பிட்ட இவர் கந்தன் கருணையும் ராஜினியையும் இலகுவாக மறந்துவிட்டார். அல்லது தவிர்த்து விட்டார். மேலும் கேசாயினி இந்த நூல் தொடர்பான தனது விமர்சனக் குறிப்பில் வடக்கையும் மலையகத்தையும் இவர் மறந்துவிட்டார் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கு காரணம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இவருக்குள் இருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தான் என்றால் தவறல்ல. மேலும் இவர் முகநூலில் தான் மலையகத்திற்கும் கிழக்குப் பகுதிக்கும் பயணம் செய்யவில்லை ஆகவே எழுதவில்லை என்கின்றார். இதுவே போதும் இது ஒரு நாவலல்ல வெறும் நினைவுகளின் குறிப்பே என கூறுவதற்கு. ஏனெனில் ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவதை ஏதாவது ஒருவகையில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு பதிவு இது ஒரு படைப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகியிருக்கும். இந்த நூலின் கதாநாயகனான “அவனுக்கு” அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களுடனும் பெண்களுடனும் நடைபெறும் ஒரு சாகாசப் பயணம். அவ்வளவுதான்.
,,,,,,,,,,,,,,,………,,,,,,,,
kumaranகுமரன் என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை அவர்களின் நினைவுக் குறிப்புகளான நான் நடந்து வந்த பாதை என்ற நூலின் அறிமுகம நிகழ்வை தேடகம் அமைப்பினர் ஒழுங்கு செய்தனர். இதில் தேடகம் குமரன், பரதன் மற்றும் ரகுமான் ஜான் ஆகியோர் உரையாற்றினர். பரதன் அவர்கள் தனது கழக மற்றும் உமாவுடனான உறவு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்.
ஜான்ரகுமான் ஜான் உரையாற்றும் பொழுது நாம் ஏன் தோற்றுப்போனோம் என்ற வினாவை எழுப்பினார். ஒவ்வொருவரும் மற்றவர் முட்டாள் எனவும். தான் அனைவரையும் திறமையாக வெட்டி ஆளுகின்றேன் எனவும் நினைப்பதுண்டு. இவ்வாறு தான் மற்றவரும் நினைக்கின்றார் என்பதை ஒருத்தரும் புரிந்துகொள்வதில்லை. இது சமூகத்திலிருக்கின்ற குட்டி பூர்சுவா சிந்தனையின் வெளிப்பாடாகும். இந்த சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இது எந்தவிதமான சமூக ஆய்வுகள் மற்றும் வரலாறு தொடர்பான புரிதல்கள் எதுவும் இல்லாமலே வெளிப்படும் கருத்தியலாகும். ஆகவே நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்வினையாகவும் உடனடி முடிவுகளை முன்வைப்பதாகவுமே இருக்கும். இது பிரச்சனைகள் தீர்க்கப்படுவது மற்றும் முன்னேறுவது போன்ற தோற்றப்பாடுகளைத் தரும். ஆனால் இது முன்னேற்றமல்ல. இதுவே நமது போராட்டத்திற்கும் நடந்தது. இதன் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் தமது சந்தேகங்களைக் கேட்டனர்.
இந்த நூல் சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பற்றியது அல்ல.  மாறாக தான் செயற்பட்ட இயக்கத்திற்குள் இருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான செயற்பாடுகள் தொடர்பானது என்றால் தவறல்ல. போராட்டத்தை சரியா பாதையில் கொண்டு செல்ல பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் வென்றது அதிகாரத்து ஆயுதப் போராட்டமே. ஈழவிடுதலைப் போராட்டதை அழித்ததுவும் அதுவே.
சாத்திரி அவர்களின் ஆயுத எழுத்திற்கும் பொன்னுத்துரை (குமரன்) அவர்களின் நான் நடந்து வந்த பாதைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. முதலாவது சமூகத்தில் நிலவும் ஆதிக்க சிந்தனைகளின் அடிப்படையிலான ஆயுத மோகமும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமும் கொண்ட பணிக்கப்பட்ட கட்டளைகளை மறு கேள்வி இல்லாமல் பின்பற்றுகின்ற ஒரு சிப்பாயினது நினைவுக் குறிப்புகள். இங்கு ஆயுதமே முனைப்பானதாக இருக்கின்றது. இரண்டாவது சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, எதிர்த்து கேள்வி கேட்கின்ற, மக்கள் மற்றும் போராளிகள் மீது அக்கறை கொண்ட பொறுப்புணர்வுள்ள ஒரு போராளியின் மன உளைச்சலே இந்த நினைவுக் குறிப்புகள். இப் போராளியின் நினைவுகளை இவ்வாறு எழுதவைத்தது இவர்களை ஆதிக்கம் செலுத்திய ஆயுதங்களே. இருப்பினும் இங்கு முனைப்பு பெற்றிருப்பது அரசியலும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் விடுதலையும் என்றால் மிகையல்ல.
இவர்கள் நடந்து வந்த பாதைகளில் எல்லாம் ஆதிக்கம் செய்தது ஆயுதமே. ஆகவேதான் நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து எனத் தலைப்பிட்டுள்ளேன்.
மீராபாரதி

ஆயுத எழுத்து - என் பார்வையில்.... Keshayine Edmund

2:54 PM, Posted by sathiri, One Comment

Thursday, March 19, 2015

ஆயுத எழுத்து - என் பார்வையில்....

விமர்சனங்கள் என்பது இப்போதெல்லாம் கட்டணங்கள் இல்லா விளம்பரங்கள்! ‘ஆயுத எழுத்து” குறித்த பல விமர்சனங்கள் தான் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தினை உருவாக்கியிருந்தது.

பாடசாலைப் பருவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பதினேழு வருடங்கள் கள போராளியாக பணியாற்றிய முன்னாள் போராளியான சாத்திரி என்கின்ற புனைப்பெயர் கொண்ட கௌரிபால் சிறி எழுதி திலீபன் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த புத்தகம் கையில் கிடைத்தது முதல் இரவு பகலாக 391 + 1 பக்கத்தினை இரு நாட்களிலேயே வாசித்து முடித்து விட்டிருந்தாலும் ஏறத்தாழ இரு வாரங்களின் பின்னர் தான் இந்த விமர்சன பதிவினை எழுத ஆரம்பித்தேன். என்னுள் நிழலாக படிந்திருந்த ஏனையவர்களின்   விமர்சனங்களின் சாயல் மறைந்த பின்னர் தான் எழுத வேண்டும் என்கின்றதே இதற்கான முக்கிய காரணம். என் விமர்சனங்களை வரைய தொடங்குகின்றேன்… 
இந்த நூலின் ஆசிரியர் “என்னுரை”யில் குறிப்பிட்டுள்ளதன் படி 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியினை தொடக்கமாக வைத்து தான் கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலோ என்னவோ “அவன்” என்கின்ற பெயரற்ற உயர்தரம் படிக்கின்ற இளைஞனின் பாத்திரமாக ஆரம்பித்து அவனை போராளியாக்கி வெளிநாட்டு கட்டமைப்பில் பணியாற்றுபவனாக்கி இறுதிவரை “அவன்” ஆகவே நகர்த்தி முடித்திருக்கின்றார். ஓரெழுத்து பெயர் தானும் வைத்திருந்தால் “அவன்” யாராவது ஒருவரது சாயலாகவோ அல்லது அடையாளமாகவோ ஆகியிருப்பான் என்று சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கின்ற சாத்திரிக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.  ஆனால் தொடர்ந்து “அவன்” ஐ தொடர்ந்தால்  “அவன்” இந்து சமயத்தவன், யாழ்ப்பாணத்தவன், உயர்சாதிக்காரன், படித்த குடும்பத்திலிருந்து வந்தவன் என்கின்ற அடையாளங்களை நாம் குறித்துக்கொள்ளலாம்.

சராசரி குடும்பத்தின் அதிகாலை நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கின்ற முதல் அத்தியாயம் 83 இன் தமிழ் சமூகத்தின் அன்றாடம் போலவே அடுத்த அத்தியாயத்திலேயே “கண்ணிவெடி”க்கு இலக்கான அவலமொன்றுக்கு போய் நின்றுவிடுகின்றது. கூடவே இத்தகைய வன்முறைகள் இளைஞர்களிடம் தோற்றுவித்திருந்த சிந்தனை விதைப்பினை பின்வரும் வரிகளில் கொடுத்து விடுகின்றார் சாத்திரி. அந்த விதை “அவன்” உள்ளும் விழுந்து விடுகின்றது.
..அது மாகியம்பதியுடன் மட்டுமே முடிந்துவிட்ட துயரக்குரல் அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்குமிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. அது முடிவு இல்லாத மரணக்குரலாக நீண்டு கொண்டிருந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலிருந்தும் மரணக்குரல்கள் எழுந்தன. கொழும்பிலிருந்து மரணச்செய்திகள் வந்தன. மலையகம், அநுராதபுரம் என எல்லா இடங்களிலிருந்தும் படுகொலைச்செய்திகள் வந்தன. மரணம் மட்டுமே செய்தியானது…….. இவையெல்லாம் என்ன தடுக்க முடியாதா? அடிக்கிறவனைத் திருப்பி அடிக்க முடியாதா? …. முடியும் என்றனர் ஊரிலுள்ள சில இளைஞர்கள். “நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்” என்றனர். அவனும் முடிவெடுத்தான் இயக்கத்தில் சேரலாம் என.
அடுத்த அத்தியாயங்களில் “அவன்” இன் அண்ணன் வீட்டுக்கு வரவில்லை என்டு வீடு கலங்கிவிடுகின்றது. இறுதியில் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டிருக்கும் தகவலும் கிடைக்கின்றது. அந்த அத்தியாயத்தில்
“எல்லாம் உன்ர பிள்ளை வளர்க்கின்ற விறுத்தம்” என அப்பா அந்த ரணகளத்திலும் புறுபுறுத்துக்கொண்டிருந்தார். எனும் வரிகள் அன்றைய.. இன்றைய என்றைய நிலையிலும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் “பிள்ளை வளர்ப்பு” என்கின்றது எப்படி ஒரு தாயை மட்டும் சார்ந்து விடுகின்றது என்பதையும் சுட்டி நிற்கின்றது.

பின்வந்த பக்கங்களில் குடும்பத்திலிருந்து சமூகத்திற்கு பாய்ந்து விடுகின்றது வரிகள்… அல்லது “அவன்” ஐ நகர்த்த வேண்டிய தேவை கருதி பயணிக்கின்றது.

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்புக்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணச் சமூகம். அது எப்போதும் சாதி, கல்வி இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடை போடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர்சாதிக்காரனாகவும், கல்வி கற்றவராகவும் இருந்தார். (பக்கம் - 25)

வரிகளிலேயே “யாழ்ப்பாணச் சமூகம்” குறித்து ஆழமாகவும் அர்த்தமாகவும் சொல்லிவிடுகின்றார் நூலாசிரியர். “ஈழபோராட்டம்” என்பது பெரும்பான்மை – சிறுபான்மை இரண்டுக்குமிடையிலானது மட்டுமல்ல சாதிகளுக்கும் இடையிலானதும் கூட என்றும் ஆக யாழ்ப்பாணத்தவருக்கு விடுதலை உணர்வு என்பதும் கூட சாதியடிப்படையிலானதொன்றானதாக தான் இருந்திருக்கின்றது என்பதை நிறுவிவிட்டிருக்கின்றார் சாத்திரி.

“பெண்ணுரிமை” குறித்து பேசும் போது “புலிப்பெண்கள்” குறித்து பேசாதவர்கள் இல்லை எனலாம். ஆனால் ரெலோவில் இணைய வந்த பெண்களை தமிழ்நாட்டில் இடைநடுவே விட்டுவிட்டு ரெலோ ஓடிவிட விடுதலைப்புலிகள் அடேல் தலைமையில் பராமரித்து பயிற்சியளித்திருக்கின்றார்கள் என்கின்ற விடயம் எனக்கு புதியதொன்று. கூடவே புலிகளின் உறுப்பினர் காட்டிய பாலின வேறுபாட்டினையும் மேற்கோள் காட்டியிருக்கின்றார் ஆசிரியர் வரும் வரிகளில்……

…இவன் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரில் இறங்கிய போது, இந்தியாவிலிருந்து பெண்கள் அணியினர் பயிற்சி முடித்து கடல் வழியாக மன்னாரில் இறங்கியிருந்தார்கள்…… இயக்கத்தின் முதலாவது ஆயுதப்பயிற்சி பெற்ற பெண்கள் அணி அது………. மன்னாரில் பெண்கள் பயிற்சி முடித்துக் களத்திற்கு வந்த போதும், யாழ்ப்பாணத்தில் அவனது பொறுப்பாளர் பெண்களை இயக்கத்தில் எடுக்க அவ்வளவாக அக்கறை காட்டாதது அவனுக்கு ஏன் என்று விளங்கவில்லை. அவர் பொறுப்பாக இருந்த காலத்தில் பெண்கள் மருத்துவம் போன்ற பணிகளுக்குத்தான் எடுக்கப்பட்டனர். பின்னர் தீப்பொறி குழவினரின் கைக்குண்டு தாக்குதலில் பொறுப்பாளர் காயமடைந்து இந்தியா சென்ற பின்னர் தான் பெண்கள் யாழ்ப்பாணத்தில் சேர்க்கப்பட்டனர்.

அடுத்தடுத்து திலீபனின் அஹிம்சை போராட்டம்….. வாசிக்கின்ற ஒவ்வொருவர் முன்னும் அந்த வீரனையும் இறுதிக்கணங்களையும் நிறுத்தித்தான் கடந்து போகின்றது…..

“இந்தியாவிற்கு அஹிம்சையைப் பற்றி யாரும் படிப்பிக்கத் தேவையில்லை” என, பரணி ஒருநாள் உறுதியாக சொன்னான். அவன் சொன்னதை கேட்க, நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் நடந்தது வேறு திலீபனின் உயிர் பிரிந்தது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதைவிட ஆற்றாமை பெருகியிருந்தது. …. திலீபனை அநேகமாக எல்லோருக்கும் பிடிக்கும். மெல்லிய…. கலைந்த தலையுடனான அந்த உருவம் நீண்ட நாட்களுக்கு இவனது கண்களின் முன் நடமாடி திரிந்தது.

“ஈழப்போராட்டம்” எப்பவும் “இந்தியர்களை” மறக்காது. ஆசிரியரும் சர்மாவை மறக்கவில்லை.

……சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளைக் கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பொருள்களான நாய்,பூனை, ஆடு, மாடு, மனிதர்களை எல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள அசையாது நின்ற கட்டடங்கள், மரம் செடி எல்லாவற்றையும் டாங்கிகள் தகர்த்தப்படி முன்னேறின.
இந்திய இராணுவத்தின் வருகை குறித்து விபரித்திருக்கின்ற சாத்திரி பெரிதாக வரிகளில் அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை என்பது என் கருத்து. துரோகம் என்றால் “கருணா” என்று சொல்லித்திரிகின்றவர்களுக்கும் அதன் வெறுப்புணர்வை “கிழக்கிற்கு” கொடுத்திருப்பவர்களுக்கும் பின்வரும் வரிகளை சமர்ப்பித்து “துரோகம்” என்பதன் வரைவிலக்கணம் ஏன் கிழக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்டது? என்கின்ற வினாவினையும் சாத்திரியின் வரிகளூடாக முன்வைக்கின்றேன். ஒருவன் துரோகம் தான் கிழக்கிற்கான முத்திரையாக வைத்த… வைக்கின்ற தகுதி வடக்கிற்கு உண்டா?

புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளுக்கு போக முடியாமல் இந்தியாவிலும் கொழும்பிலும் தங்கியிருந்த மாற்று இயக்ககாரர்களை உள்ளடக்கிய “3 ஸ்டார்” அமைப்பை இந்திய உளவுப்பிரிவினர் உருவாக்கினார்கள்…..ஈ.என்.டி.எல்.எஃப் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியவற்றினை ஒன்றிணைத்து….. யாழிலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் கொண்டு வந்து இறக்கினார்கள்.

மண் என்பதற்கானது தான் இப்போராட்டம் என்றால் “வடக்கு” மண்ணில் முஸ்லீம்களுக்கும் பங்கில்லையா? என்பது என்னுள்ளான கேள்விகளுள் ஒன்று. சாத்திரியின் “அவன்” உம் என் கேள்விக்குள் விழுந்து பயணிக்கின்றான். ஆசிரியர் ஒருவேளை “முஸ்லீம்களின் வெளியேற்றம்” குறித்தும் பேசவேண்டும் அல்லது 83 இல் ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்று விடுமோ என்று நினைத்திருப்பார் போலும். அடுத்தடுத்த இரு பந்திகளில் கேள்வியும் விடையும் ஆக மேற்கோள் காட்டியிருக்கின்றேன். ஆனால் ஆசிரியர் என்னளவில் சரியாக பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. (இவ்விரு பந்திகளும் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

…..சொல்லி முடித்த நலீமா கண்ணீர் வழிந்த விழிகளைத் துடைத்த படியே, “இப்ப சொல்லு எதுக்காக எங்களை வெளியேத்தவேனும்? எங்களுக்கும் கிழக்கு முஸ்லீம்களுக்கும் கூட வியாபார தொடர்போ, உறவோ எதுவும் பெயரளவில் இல்லை. முஸ்லீம்கள் என்ற ஓர் அடையாளத்திற்காகவே வெளியேற்றப்பட்டோமோ? ஏதாவது சொல்லன்” என்றாள். அவனிடம் பதில் எதுவும் இல்லை தொண்டை அடைப்பது போல் இருந்தது.

எங்கடை ஊர் மல்வத்தைச் சோனகரும் சிங்களரும் எங்கடை ஊருக்கே புகுந்து அட்டகாசம் பண்ணி வெட்டி கொத்தி எல்டீலாரையும் திரத்திட்டாங்கள்………அதிலை என்டை அம்மாவும் செத்துப்போனா. அதுதான் அவங்களுக்கு ஏதாவது செய்யவேணும் என்டு இயக்கத்திலை சேர்ந்தன். அதுவும் சும்மா சண்டையிலை செத்துப்போக விருப்பம் இல்லை. சாகிறதென்டால் ஏதாவது பெரிசா செய்திட்டு சாகவேணும். அத தான் கரும்புலிக்கு போக விரும்பினன்.” என்று விட்டு அவனையே அசையாது பார்த்தபடி நின்றாள்.

“ஆயுத எழுத்து” இல் என்னுள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததொரு பாத்திரம் “ரெஜினா” சிங்கள தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்தவள். தன் சொந்த அவலத்தின் பழியுணர்வினால் கரும்புலியில் இணைந்தவள். “அவன்” ஆல் தெரிவுசெய்யப்பட்டு இலங்கையின் தெற்கிற்கு பயணிக்கின்றாள். முக்கிய அதிகாரிகளுடன் பழகவிடப்படுகின்றாள். கடைசியில் தற்கொலை குண்டுதாரியாகி “பச்சைக்கட்சி வேட்பாளரோடு அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்” என்கின்ற தலைப்புச் செய்தியின் நாயகியாகிப்போய்விடுகின்றாள். இங்கே “பெண்ணுடல்” என்பது போரில் மட்டும் மரணிக்கவில்லை. சிலரது “படுக்கையிலும் மரணித்திருக்கின்றது” என்பதை மறுப்பதற்கில்லை. “கற்பு, ஒழுக்கம்” பேசிய அதேயவர்கள் தான் “பெண்” ஐ பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதை “போர் வியூகம்” என்று நியாயப்படுத்தி விடுகின்றார்கள் என்று நினைக்கும் போதும் “போரில் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண் இரண்டாம் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்” என்கின்ற வாசகம் தான் என் சிந்தையில் தோன்றுகின்றது.  “ரெஜினா” ஏதோவொரு புள்ளியில் இன்றும் என்னுள் வலித்துக்கொண்டிருக்கின்றாள்.

அடுத்த கட்டமாக “அவன்” நாடு கடக்கின்றான். கடல்களை தாண்டுகின்றான். “அவன்” க்கு முகம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் அவன் சந்திக்கின்றவர்களது முகங்களை தெளிவாகவே காட்டுகின்றமை ஆசிரியருக்கு ஏதும் தனிப்பட்ட பகையிருக்குமோ என்கின்ற ஐயத்தினை ஏற்படுத்துகின்றது. சுயம் பற்றி நான் அலச விரும்பாததாலும் எப்பவும் “ஒரு நாள் கள்ளன் தான் மாட்டுவான் பல நாள் கள்ளன் எப்படியும் தப்பித்துக்கொள்வான்” என்கின்ற என் தனிப்பட்ட மனவாசகத்தினாலும் நபர்கள் குறித்த ஆசிரியரின் அலசலை என் எழுத்தில் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் நான் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான பிரபாகரன் அவர்கள் “புலம்பெயர் சமூகத்திடம்” ஒப்படைத்துள்ள போராட்டம் பற்றிய விமர்சனங்களை விவாதிக்க வேண்டிய தேவை இன்று உள்ளதாலும் சாத்திரியின் பின்வரும் வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

80 களில் ஊரில் இயக்கங்களின் தோற்றத்தின் போது வெளிநாடுகளிலும் அவர்களுக்கு உதவுவதற்காகச் சிலர் ஒவ்வோர் இயக்கத்தின் சார்பிலும் நிதி சேகரிப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் அதில் பாதி அங்கும் மீதி இவர்கள் பைக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. பின்னர் மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டு புலிகள் மட்டும் நிலைத்த போது ஃபிரான்ஸில் புலிகளுக்காக நிதிசேகரிப்பு செய்தவர்களில்….. அதேநேரம் புலிகள் அமைப்புக்காகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த… ஒருவர்…….. இவர்கள் நிதியைச் சேகரித்துப் புலிகளுக்கு அனுப்புவார்கள். எவ்வளவு சேகரித்தார்கள். எவ்வளவு அனுப்பினார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது…… அன்றைய காலங்களில் வெளிநாடுகளில் புலிகள் சார்பாக வேலை செய்த அனைவருமே செய்த செயல் தான். பலர் சேகரிக்கப்பட்ட நிதியோடு வேறு நாட்டுக்கு தப்பியோடி வாழ்கின்றார்கள்…… இப்படியான நிதி மோசடிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக கிட்டு ஐரோப்பாவிற்கு வந்திருந்த காலங்களில் கவனஞ்செலுத்தியதோடு, ….. 70 சதவீதத்தை இயக்கத்திற்கு அனுப்பச் சொல்லி கட்டளையிட்டிருந்தார்…… ஆனால் கிட்டு ஐரோப்பாவை விட்டுப் போனதும் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
…. போடுவதன் மூலம் மூன்று விஷயங்களை நிறைவேற்றலாம் எனப் புலிகளின் புலனாய்வுப்பிரிவு கணக்குப்போட்டது.
1.    இந்த விஷயத்தை இயக்கத்தின் வெளிநாட்டு அனைத்துலகப் பிரிவு பொறுப்பாளர்களிடம் கசியவிட்டு இயக்கத்தின் நிதியை கையாடல் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பது.
2.    சாதாரண புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை இலங்கை புலனாய்வாளர்களால் செய்யப்பட்டது என ஓர் அனுதாப அலையை உருவாக்குதல்
3.    ….ஏற்படுத்தப்பட்ட அனுதாப அலையை வைத்து உணர்ச்சி தளத்திலுள்ள மக்களிடம் மேலதிகமாக நிதி சேகரிப்பை செய்வது.

59 அத்தியாயங்கள் வரை போராளியாக பயணித்த “அவன்” தனக்கு வருகின்ற
…….. “டேய் எங்கடை கட்டமைப்பைக் கலைச்சிட்டு எல்லாரும் ஏதாவது நாடுகளிலை தங்கடை சொந்த வாழ்க்கைக்கு போகலாம்.. என்று தலைமை அறிவிச்சிருக்கு என்று வசனங்களை நிறுத்திப் பேசினார்…… என்கின்ற அழைப்பினூடாக நிறுத்தப்படுகின்றான். அடுத்ததும் இறுதியானதுமான 60 வது அத்தியாயத்தில்…..

நள்ளிரவைத் தாண்டி நண்பனிடம் விடைபெற்றான். இவனைக் கொண்டு வந்து வீட்டில் விடுவதாக நண்பன் சொன்னான். இவன் மறுத்த விட்டான். தள்ளாடிய படி வந்து காரில் ஏறினான். “ கல்லறைகள் விடை திறக்கும்…..ஒரு பாடலை எழுதிடும் இரவு” சாந்தன் பாடிக்கொண்டிருந்தார்…….. வளைந்த மலைச்சரிவுகளில் கார் வேகமெடுக்கத் தொடங்கியது……. தொலைபேசி அலறியது. பார்த்தான் அது யூலியா அதனை எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்ற போது, நழுவி விழுந்து விட அதைக்குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தான். எதிரே பெரிய வீதி வளைவு……. வீதிப் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் உருளத்தொடங்கியிருந்தது.

“அவன்” ஐ முற்றுப்புள்ளி அல்லது அரைக்காற்புள்ளி ஆக்கிவிட்டார் ஆசிரியர். 59 வரை சீராக வந்த வளைவு மாதிரியான “அவன்” கதை திடீரென 90 பாகையில் சரிந்து நின்றுவிட்டது போன்றதொரு உணர்வு எனக்குள். சாத்திரி தன் முன்னுரையில் “கிழக்கு சம்பவங்களை சரிபார்க்க” பத்திரிகையாளர்களான இரா.துரை, நிராஜ் டேவிட் உதவியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் எண்ணிப் பத்து தடவை கூட “கிழக்கு” குறித்து “ஆயுத எழுத்து” இல் பேசப்படவில்லை. ஏன் உலகம் சுற்றியளவிற்கு கூட சாத்திரியின் “அவன்” கிழக்கிற்கோ மலையகத்திற்கோ பயணிக்கவில்லை. வழமை  போன்று மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? அல்லது வடக்கிலிருந்து வேறு இடங்களுக்கு பயணிக்க விரும்பவில்லையா? என்கின்ற என் கேள்விக்கான பதிலை சாத்திரியிடம் எதிர்பார்க்கின்றேன். 
கூடவே நாணயத்தின் ஒரு பக்கத்தினை எழுதியுள்ள “ஆயுத எழுத்து” என்பது எனக்கடுத்த தலைமுறைக்கு ஒரு காவியமாக மாறிட கூடாது என்பதால் மறுபக்கத்தினை வரைய வேண்டிய தேவை, இந்திய துரோகங்களை பட்டியலிட வேண்டிய தேவை நிச்சயம் இன்னுமொரு எழுத்தாளனுக்கு உருவாக வேண்டும். எனினும் பலர் உடைக்க முடியாமல் திணருகின்ற கட்டுக்களை உடைத்து “ஆயத எழுத்து” எழுதியிருக்கின்ற சாத்திரியையும் அவரது தைரியத்தையும் வாழ்த்தாமலும் என்னால் இருக்க முடியவில்லை

தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட…